பூவாயிகுளத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்க முயன்ற 14 வீரர்கள் காயம்


பூவாயிகுளத்தில் ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்க முயன்ற 14 வீரர்கள் காயம்
x
தினத்தந்தி 27 April 2019 11:00 PM GMT (Updated: 27 April 2019 7:32 PM GMT)

பூவாயிகுளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்களில் 14 பேர் காயம் அடைந்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள பூவாயிகுளம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை அந்த கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஆலயத்தின் அருகே அமைக்கப்பட்டு இருந்த வாடிவாசலில், அலங்கரிக்கப்பட்ட புனித செபஸ்தியார் ஆலய காளைக்கு மரியாதை செய்யப்பட்டு முதல் காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம், சின்னவளையம், பெரியவளையம், கல்லேரி, கல்லாத்தூர், விழப்பள்ளம், தேவாமங்கலம், பூவாணிபட்டு, குமுழியம், பரணம், சுத்தமல்லி, ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி, வெண்ணங்குழி, வில்வகுளம், முதுகுளம், பாப்பாக்குடி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும், 400-க்கும் மேற்கட்ட காளைகளும் கலந்து கொண்டன. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை முட்டி கீழே தள்ளியும், தூக்கி எறிந்தும் ஆக்ரோஷமாக எல்லைக்கோட்டை கடந்து சென்றன. மேலும் சில காளைகள் “என்னை பிடித்து பார்“ என்று வீரர்களுக்கு சவால் விடும் வகையில் நின்று விளையாடின. ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட 2 காளைகள் திடலில் நின்று ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டன. இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க முயன்ற 14 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினரால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மணக்கரையை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில் தங்க காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், மெத்தை, செல்போன், கடிகாரம், டிவி, நாற்காலி, உள்பட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி மேற்பார்வையில், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், வசந்த், நடேசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Next Story