வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2019 9:45 PM GMT (Updated: 27 April 2019 8:21 PM GMT)

வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் மேலாண்டை 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 29). இவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மேற்கு தாம்பரம், அய்யாசாமி தெருவில் உள்ள அரிசி மண்டியில் வேலை செய்து வந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு அங்குள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையில் இருந்தும் நின்றுவிட்ட அவர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது.

தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவருடைய தாய், “எதற்காக இப்படி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறாய்?, குடிப்பதை விட்டுவிட்டு ஒழுங்காக வேலைக்கு செல்” என மகனை கண்டித்தார்.

இதில் மனம் உடைந்த ராமநாதன், தான் ஏற்கனவே வேலை செய்து வந்த மேற்கு தாம்பரம், அய்யாசாமி தெருவில் உள்ள அரிசி மண்டியின் 2-வது மாடிக்கு சென்று அங்குள்ள குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வழக்குப்பதிவு

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீசார், தூக்கில் தொங்கிய ராமநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story