பானி புயல் தொடர்பாக அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது


பானி புயல் தொடர்பாக அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 27 April 2019 10:45 PM GMT (Updated: 27 April 2019 8:57 PM GMT)

நாமக்கல்லில் பானி புயல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் பானி புயல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் அந்தந்த துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக வருவாய்த் துறையினர் பருவமழை காலங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பேரிடர் விவரங்களை உடனுக்குடன்் தெரிவிக்க கிராம வாரியான தன்னார்வலர் குழுக்களையும், வட்ட அளவிலான குழுக்களையும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டார அளவிலான குழுக்களையும் அமைத்து அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அலுவலர்கள் நியமனம்

புயலால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க ஏதுவாக பள்ளி கட்டிடங்கள் மற்றும் சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் குடிநீர், மின்சாரம், கழிவறை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தயார் நிலையில் வைக்கவும் தாலுகா அலுவலகத்தில் இரவு நேர பணிக்கென அலுவலர்களை நியமனம் செய்து செயலாற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளுக்கு தேவையான படகுகள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் அனைத்து வகையான உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செல்போன் எண்கள் வெளியீடு

மேலும் புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர கால உதவிக்கு மாவட்ட அவசர கால நடவடிக்கை மையத்தை 1077 என்ற எண்ணில் அணுகலாம் எனவும், நாமக்கல் தாலுகாவை சேர்ந்தவர்கள் 94450 00543 என்ற எண்ணிலும், ராசிபுரம் தாலுகாவை சேர்ந்தவர் 94450 00544 என்ற எண்ணிலும், சேந்தமங்கலம் தாலுகாவை சேர்ந்தவர்கள் 94454 61913 என்ற எண்ணிலும், கொல்லிமலை தாலுகாவை சேர்ந்தவர்கள் 92450 49499 என்ற எண்ணிலும், குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்தவர்கள் 92451 59566 என்ற எண்ணிலும், திருச்செங்கோடு தாலுகாவை சேர்ந்தவர்கள் 94450 00545 என்ற எண்ணிலும், பரமத்திவேலுார் தாலுகாவை சேர்ந்தவர்கள் 94450 00546 என்ற எண்ணிலும், மோகனுார் தாலுகாவை சேர்ந்தவர்கள் 94428 94789 என்ற செல்போன் எண்ணிலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story