பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமான அவதூறு ஆடியோ வெளியிட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட மேலும் 4 பேர் கைது


பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமான அவதூறு ஆடியோ வெளியிட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 7:25 PM GMT)

பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமான அவதூறு ஆடியோ வெளியிட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் கடந்த 19-ந் தேதி பொன்னமராவதியில் கலவரம் வெடித்தது. இதற்கிடையில், பொன்னமராவதி திருக்களம்பூர் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த கருப்பன் என்பவர் அவதூறாக பேசும் ஆடியோ வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி பொன்னமராவதி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இளங்கோ, அன்பழகன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவதூறு ஆடியோ வெளியிட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மஞ்சவயல் கரிசல்காடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் செல்வக்குமார் (வயது 34) என்பவர் சிங்கப்பூரில் இருந்து அவதூறு ஆடியோவை வெளியிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து கடந்த 25-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் வசந்த்(30), புதுக்கோட்டை அருகே உள்ள நெறிஞ்சிப்பட்டியை சேர்ந்த முனியன் மகன் சத்தியராஜ் (வயது 30) ஆகியோரை கைது செய்து, திருமயம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் குறிப்பிட்ட ஆடியோவை பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம், தொந்துபுலிக்காடு பகுதிகளை சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் சீகன்காடு பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 19), புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மோசக்குடியை சேர்ந்த ரெங்கையா (45) ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, புதுக்கோட்டையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமான ஆடியோ வெளியிட்ட வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story