ரூ.78 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு


ரூ.78 லட்சத்தில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 8:58 PM GMT)

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள வேங்கிக்கால் ஏரிக்கரையோரம் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவானது 50 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படுகிறது.

மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்கள், பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான பரிணாம பூங்கா, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை, சிற்றுண்டி நிலையம், இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் வேங்கிக்கால் ஏரிக்கரையோரம் பச்சை புல்வெளி, குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர், அறிவியல் பூங்கா அமைக்கும் பணி குறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதாவிடம் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து பூங்காவில் அமைக்கப்பட உள்ள பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றையும் கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) பிரகாஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story