நிலக்கோட்டையில், ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்


நிலக்கோட்டையில், ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 28 April 2019 11:14 PM GMT (Updated: 28 April 2019 11:14 PM GMT)

நிலக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் பகுதியில் விளையும் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதுதவிர தாலுகா அலுவலகம், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் வேலை நிமித்தமாக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதையொட்டி நிலக்கோட்டை நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் நிலக்கோட்டை நால்ரோடு, அணைப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக் கப்பட்டுள்ளன. இதுதவிர சாலையோரத்தில் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதை தவிர்க்க கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்துள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story