இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு - பஸ், ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை


இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி, மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு - பஸ், ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 11:15 PM GMT)

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலியால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்,

இலங்கையில் கடந்த 21-ந் தேதி கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

தமிழகத்திலும் இதுபோன்ற வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் அனைத்து இடங்களிலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் பஸ் நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடனும், தீவிர சோதனை செய்தனர். அதேபோல் ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடந்தது. பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் வந்து சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் போலீசார், ஒவ்வொரு பெட்டியாக சென்று தீவிர சோதனை செய்தனர். அதேபோல் ரெயில் நிலைய தண்டவாள பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த பணியில் போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஈடுபட்டனர். இவர்களுடன் விழுப்புரம் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான கடைவீதிகள், மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story