பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 29 April 2019 10:00 PM GMT (Updated: 29 April 2019 4:27 PM GMT)

கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும்அவதிப்பட்டு வந்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கொத்தகுப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும்அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அவர்கள் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கொத்தகுப்பம் கிராம மக்கள் அங்குள்ள ரேஷன் கடை எதிரே காலிக்குடங்களுடன் தண்ணீர் வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுடன் கலந்து பேசி குடிநீர் வழங்க ஆவன செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story