பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 7:21 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்திய மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருத்துறைப்பூண்டி,

பாலித்தீன் பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதை மீறி பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது திருத் துறைப்பூண்டி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருத் துறைப்பூண்டியில் உள்ள ஒரு சில வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.

அதன்பேரில் திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு மளிகை கடையில் நகராட்சி ஆணையர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், நகரமைப்பு ஆய்வாளர் அருள் முருகன் ஆகியோர் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த மளிகை கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதே போல் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Next Story