எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சை மாவட்டம் 95.92 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் 3 இடங்கள் முன்னேற்றம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: தஞ்சை மாவட்டம் 95.92 சதவீதம் தேர்ச்சி மாநில அளவில் 3 இடங்கள் முன்னேற்றம்
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 7:44 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டம் 95.92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் 3 இடங்கள் முன்னேறி உள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தஞ்சை மாவட்டத்தில் 405 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 905 மாணவர்களும், 16 ஆயிரத்து 366 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 271 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 20 ஆயிரத்து 953 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 963 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 990 பேரும் அடங்குவர். தேர்ச்சி சதவீதம் 95.92 சதவீதம் ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.08-ம், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 97.70 சதவீதமும் ஆகும்.

தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாவட்ட அளவில் 94.88 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. தற்போது 1.04 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளது. இதே போல் மாநில அளவில் கடந்த ஆண்டு 21-வது இடத்தை பிடித்த தஞ்சை மாவட்டம் தற்போது 3 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளது.

தேர்வு எழுதிய 405 பள்ளிகளில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 10 பள்ளி, மாநகராட்சி பள்ளி 2, நகராட்சி பள்ளி 1, அரசு உதவி பெறும் பள்ளிகள் 35, அரசு பள்ளிகள் 210, ஓரியண்டல் பள்ளிகள் 2, பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 26, சுயநிதி பள்ளிகள் 117, சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 2 பள்ளிகள் ஆகியவை அடங்கும்.

இதில் 182 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் அரசு பள்ளிகளில் 87 பள்ளிகளும், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் தமிழ்பாடத்தில் 96.57 சதவீதம் மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 97.81 சதவீத மாணவர்களும், கணித பாடத்தில் 97.17 சதவீதம் மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 98.88 சதவீதம் மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 97.59 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த தகவலை தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தா தெரிவித்தார்.

அப்போது மாவட்ட கல்வி அதிகாரிகள் சின்னையன் (பட்டுக்கோட்டை), பீர்ஜான் (ஒரத்தநாடு), மஞ்சுளா (தஞ்சை), பாப்பம்மாள் (கும்பகோணம்), நேர்முக உதவியாளர் செந்தில், கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story