சிவகாசியில் வங்கியில் திடீர் தீ; பொருட்கள் சேதம்


சிவகாசியில் வங்கியில் திடீர் தீ; பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 1 May 2019 7:59 PM GMT)

சிவகாசியில் உள்ள அரசு வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையம் அருகில் அரசு வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் நேற்று காலை 8 மணிக்கு திடீரென தீ பிடித்து எரிந்தது. வங்கியில் இருந்து கரும்புகை வெளியே வந்ததை தொடர்ந்து வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வங்கியின் கதவை திறந்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் வங்கியில் இருந்து மேஜை, நாற்காலி மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை எரிந்து நாசமானது. வங்கியில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் கிடைத்த சிவகாசி டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிவகாசி பஸ் நிலையம் அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பஸ் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story