மகனை கணவர் அழைத்து சென்றதால் விரக்தி, கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


மகனை கணவர் அழைத்து சென்றதால் விரக்தி, கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2019 10:45 PM GMT (Updated: 2 May 2019 8:09 PM GMT)

மகனை கணவர் அழைத்து சென்றதால் விரக்தி அடைந்த பெண், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொங்கலூர்,

பல்லடம் அருகே உள்ள பனப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 37). இருசக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி மனோன்மணி(28). இவர்களுக்கு பவிஷ்னு(6) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மனோன்மணி தனது மகனை அழைத்துக்கொண்டு கிரிச்சிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் காலை கிரிச்சிபாளையம் வந்த பாலசுப்பிரமணியம் தனது மகன் பவிஷ்னுவை தன்னுடன் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு மனோன்மணி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் பாலசுப்பிமணியம் தனது மகன் பவிஷ்னுவை தன்னுடன் அழைத்துக்கொண்டு பனப்பட்டிக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனோன்மணி தனது தாய் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணியின் பெற்றோர் அவரை தேடினார்கள்.

அப்போது ஊர் அருகே உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே மனோன்மணியின் காலணி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கிணற்றை எட்டி பார்த்தனர். கிணற்றுக்குள் தண்ணீர் இல்லாததால் பலத்த காயம் அடைந்து மனோன்மணி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதனால் பதறி போன பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களின் உதவியுடன் கட்டில் மூலம் மனோன்மணியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோன்மணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் மகனை கணவர் தன்னுடன் அழைத்து சென்றதால் விரக்தி அடைந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story