சோளிங்கர் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் - பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரியிடம் ஆவேச கேள்வி


சோளிங்கர் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் - பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரியிடம் ஆவேச கேள்வி
x
தினத்தந்தி 2 May 2019 10:45 PM GMT (Updated: 2 May 2019 11:11 PM GMT)

சோளிங்கர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். சமரசப்பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரியிடமும் அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சோளிங்கர்,

சோளிங்கரிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் பாண்டியநல்லூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையத்தில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தொலைதூரத்துக்கு சென்றும், காசு கொடுத்தும் குடிநீரை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஊராட்சி செயலாளரிடமும், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அவர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள் நேற்று காலை 10.30 மணியளவில் சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் பஷீர் போலீசாருடன் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்தான் எங்களிடம் பேச வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் விடுப்பில் இருந்ததால் மறியல் நடந்த இடத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, தனது அலுவலர்களுடன் சென்றார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், “நாங்கள் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தோம். ஆனால் எதிலும் தண்ணீர் வரவில்லை.

இதனால் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க உள்ளோம். அது வரை டேங்கர் லாரி மூலம் உங்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், இதே பகுதியில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆழ்துளை கிணறு அமைத்து பல மாதங்களாக தண்ணீரை விலைக்கு விற்று வருகிறார். அங்கு மட்டும் எப்படி தண்ணீர் வருகிறது? நீங்கள் போட்ட இடத்தில் மட்டும் ஏன் தண்ணீர் வரவில்லை. இனி நீங்கள் புதிதாக போடும் இடத்தில் தண்ணீர் வரும் என்பதற்கு என்ன உத்தரவாதம் கொடுக்கிறீர்கள்” என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

அவர்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், உடன் சென்ற அலுவலர்கள் மற்றும் போலீசாரும் சமாதானப்படுத்தினர். உறுதியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும். அதுவரை இன்று முதல் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என அப்போது அவர்கள் கூறினர். அதனை ஏற்ற போராட்டக்காரர்கள் ஒரு மணி நேரமாக நடத்திய மறியலை கைவிட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

Next Story