குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை மாநில தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி


குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை மாநில தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 3 May 2019 11:49 PM GMT (Updated: 3 May 2019 11:49 PM GMT)

குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோரி சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டசபையில் குந்துகோல், சிஞ்சோலி ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குந்துகோல் தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதா உள்பட 8 வேட்பாளர்களும், சிஞ்சோலி தொகுதியில் காங்கிரஸ், பா.ஜனதா உள்பட 17 வேட்பாளர்களும் என மொத்தம் 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 4 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். இரு தொகுதிகளிலும் சேர்த்து 17 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குந்துகோல் தொகுதியில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 444 வாக்காளர்களும், சிஞ்சோலி தொகுதியில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 869 வாக்காளர்களும் உள்ளனர். இதில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் 7,908 பேர். இந்த இடைத்தேர்தலையொட்டி குந்துகோல் தொகுதியில் 214 வாக்குச்சாவடிகளும், சிஞ்சோலியில் 241 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன.

மொத்தம் 455 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 தொகுதிகளிலும் தலா 2 மகளிர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த 27 பறக்கும் படை குழுக்கள், 28 சோதனைச்சாவடிகள், 9 கலால் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

குந்துகோல் தொகுதியில் 25 பதற்றமான வாக்குச்சாவடிகளும், சிஞ்சோலியில் 60 பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கர்நாடக ஆயுதப்படை பாதுகாப்பு, வெப் கேமரா மூலம் கண்காணித்தல், நுண்ணிய பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுதல், ஓட்டுப்பதிவை வீடியோ பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிவறை, முதலுதவி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.

Next Story