வாக்கு எண்ணும் மையத்தில் தகராறு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்


வாக்கு எண்ணும் மையத்தில் தகராறு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 4 May 2019 10:15 PM GMT (Updated: 4 May 2019 3:00 PM GMT)

நாகர்கோவிலில் வாக்கு எண்ணும் மையத்தில் தகராறில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இங்கு 24 மணி நேரமும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுழற்சி அடிப்படையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு பணியில் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார் என்பவரும் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று கிருஷ்ணகுமார், ஆயுதப்படை போலீஸ்காரர் ஸ்ரீகுமார் என்பவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் திடீரென ஸ்ரீகுமாரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக் கினார். இச்சம்பவம்அங்கு  பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதற் கிடையே வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் காரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் பார்வையிடப்பட்டன.

இந்த விசாரணை அறிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் சமர்ப்பிக்கப் பட்டது. இதையடுத்து போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.

Next Story