வணிகர் தினத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு


வணிகர் தினத்தையொட்டி, மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 5 May 2019 10:45 PM GMT (Updated: 6 May 2019 12:23 AM GMT)

வணிகர் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.

விழுப்புரம்,

ஆண்டுதோறும் மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று வணிகர் தினத்தையொட்டி விழுப்புரம் நகரில் மளிகை கடைகள், துணிக்கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், நகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. அதுபோல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒன்றிரண்டு டீக்கடைகளும் திறந்திருந்தன.இருப்பினும் பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்ததால் விழுப்புரம் நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம்- புதுச்சேரி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, கே.கே.சாலை, எம்.ஜி.சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை மற்றும் மார்க்கெட் வீதிகள் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, மேல்மலையனூர், திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம், வானூர், மரக்காணம் உள்பட மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்திருந்தனர். பின்னர் வியாபாரிகள் அனைவரும் சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் பங்கேற்றனர்.

Next Story