மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரத்தின் பெரும்பகுதி வெளியே தெரிகிறது


மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரத்தின் பெரும்பகுதி வெளியே தெரிகிறது
x
தினத்தந்தி 7 May 2019 10:45 PM GMT (Updated: 7 May 2019 8:50 PM GMT)

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் நீர்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கி இருந்த புராதன நினைவு சின்னங்களான நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரம் ஆகியவற்றின் பெரும்பகுதி வெளியே தெரிகிறது.

கொளத்தூர், 

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன் மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளில் காவிரிபுரம், புதுவேலமங்கலம், சாம்பள்ளி உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் இருந்தன. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டதும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.அப்போது அவர்கள் தங்களது கிராமங்களில் வழிபட்டு வந்த வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டு விட்டு வெளியேறினர். பின் அந்த வழிபாட்டு தலங்கள் தண்ணீரில் மூழ்கின.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் இந்த வழிபாட்டு தலங்களான நந்தி சிலை, கிறிஸ்தவ கோபுரங்கள் வெளியே தெரிவது வழக்கம். அப்போது இந்த புராதன நினைவு சின்னங்களை பார்ப்பதற்காக அந்த கிராமத்தில் இருந்த பொதுமக்களின் வம்சாவளியினரும், சுற்றுலா பயணிகளும் பண்ணவாடி பரிசல் துறைக்கு வருவது வழக்கம். இதனால் பண்ணவாடி பரிசல் துறை சுற்றுலா தலமாக மாறும்.இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 51 அடியாக குறைந்துள்ளது. இதனால் பண்ணவாடி நீர் தேக்கப்பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலையின் பெரும்பகுதி தற்போது வெளியே தெரிகிறது. அதேபோல கிறிஸ்தவ கோபுரமும் சுமார் 20 அடி உயரத்திற்கு வெளியே தெரிகிறது. இந்த புராதன நினைவு சின்னங்களை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடி பரிசல் துறைக்கு வந்து போவதால் பண்ணவாடி பரிசல் துறை சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

Next Story