பல வே‌ஷமிட்டு நடித்தாலும் மு.க.ஸ்டாலினால் முதல்–அமைச்சராக முடியாது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


பல வே‌ஷமிட்டு நடித்தாலும் மு.க.ஸ்டாலினால் முதல்–அமைச்சராக முடியாது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 8 May 2019 11:30 PM GMT (Updated: 8 May 2019 7:37 PM GMT)

பல வே‌ஷமிட்டு நடித்தாலும் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்–அமைச்சராக முடியாது என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து ஆலங்குளம் பகுதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து புரிந்து அதற்கேற்ப தீர்வுகளை அ.தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. மத்திய–மாநில அரசின் நல்ல பல திட்டங்களை மக்களுக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நடைபெற இருக்கிற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் நீதிபதிகளாகிய மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குங்க. காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு என்ன செய்ய முடிந்தது? யார் ஆட்சியில் தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்காக நல்ல பல திட்டங்களை கொண்டு வரப்பட்டது? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஜெயலலிதா தனது ஆட்சியில் மக்களுக்காக, மாநிலத்தின் வளர்ச்சி மேம்பாட்டிற்காக தொலைநோக்கு சிந்தனையோடு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தார்கள். உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் மக்களுக்கு தந்தார். உண்ண உணவுக்காக விலையில்லா அரிசியையும், வீடு இல்லாத 6 லட்சம் பேருக்கு தரமான கான்கிரீட் வீடுகளும் வழங்கினார்.

ஒரு பெண்ணுக்கு திருமணம் தடைபடக்கூடாது அல்லது திருமணம் தாமதம் ஆகி விடக்கூடாது என்பதற்காக தாலிக்கு தங்கம் வழங்கினார். அந்த திட்டத்தை தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. சகோதரர்கள் ஸ்கூட்டர் ஓட்டி செல்லும் போது, பின் சீட்டில் சகோதரி, தாய் உள்ளிட்ட பெண்கள் உட்கார்ந்து செல்வார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தற்போது ஸ்கூட்டரை சகோதரி ஓட்டுகிறார். அந்த ஸ்கூட்டரின் பின்சீட்டில் அண்ணன், தம்பி, அப்பா என்று ஆண்கள் உட்கார்ந்து செல்கிறார்கள். பெண்கள் நாட்டின் கண்களாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மழை பெய்யவில்லை. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அதை அறிந்து விவசாயிகளுக்காக ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி 4 நாட்கள் வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வினர் கோர்ட்டுக்கு சென்று தடை வாங்கி உள்ளனர். தேர்தல் முடிந்ததும் முறையாக தடைநீக்கம் பெற்று விவசாயிகளுக்கு அறிவித்தபடியே ரூ.2,000 நிதிஉதவி வழங்கப்படும்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை தீயிட்டுக் கொளுத்தி வருகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கையில் தீப்பந்தங்களா உள்ளது? தி.மு.க. ஆட்சியில்தான் மதுரையில் லீலாவதி, த.கிருஷ்ணன் ஆகியோர் கொலை, பத்திரிகை அலுவலகம் எரிப்பு, வன்முறை செயல் நடந்தது. ஏழை–எளிய அப்பாவி மக்கள் நிலங்கள், சொத்துகள் அபகரிக்கப்பட்டது. முதல்–அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் தி.மு.க.வினரிடம் இருந்து அப்பாவி மக்களின் சொத்துகள், நிலங்கள் மீட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தற்போது மக்களிடம் வருகிற 23–ந்தேதிக்கு பிறகு அ.தி.மு.க. ஆட்சி வீட்டுக்குப் போய் விடும் என்று கூறி ஓட்டு கேட்டு வருகிறார். அவர் மக்களிடம் தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியவில்லை. காரணம் தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. ஆகவே அவரால் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் தட்டுப்பாடு இருந்தது. மக்கள் அவதிப்பட்டனர். கடந்த 2011–ல் முதல்–அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் ஒரே ஆண்டில மின் தட்டுப்பாட்டை போக்கி மின் மிகை மாநிலமாக உருவாக்கினார்.

வண்ண, வண்ண சட்டை அணிந்து, வே‌ஷம் போட்டு மக்களிடம் ஓட்டு வாங்கி முதல்–அமைச்சர் ஆகிவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. அவர் டீக்கடையில் டீ குடிக்கிறார். ஒரு நெசவாளர் வீட்டில் நெசவு செய்திருக்கிறார். நெசவு செய்தது போல நடித்த வீட்டில் சுவற்றில் அம்மா படம் இருந்ததை அவர் பார்க்காமல் விட்டுவிட்டார். எத்தனை வே‌ஷம் போட்டு நடித்தாலும் முதல்–அமைச்சர் கனவு பலிக்கவே பலிக்காது.

நடந்து முடிந்த 39 நாடாளுமன்ற தொகுதி தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி தேர்தலிலும், நடைபெறவுள்ள 4 சட்டமன்ற தொகுதி தேர்தலிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெறும். காரணம் மக்களோடு மக்களாக அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். டி.டி.வி.தினகரன் தனக்கு தானே பேசிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. ஒரு ஆழமரம். அதில் பல கிளைகள் உள்ளன. எத்தனை சுனாமிகள் வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story