பிளஸ்-1 தேர்வு முடிவு: திருவள்ளூர் மாவட்டத்தில் 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-1 தேர்வு முடிவு: திருவள்ளூர் மாவட்டத்தில் 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 8 May 2019 10:45 PM GMT (Updated: 8 May 2019 7:48 PM GMT)

பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பிளஸ்-1 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:-

பிளஸ்-1 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, திருத்தணி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் மொத்தமுள்ள 359 பள்ளிகளில் 19 ஆயிரத்து 96 மாணவர்களும், 21 ஆயிரத்து 930 மாணவிகளும் என மொத்தம் 41 ஆயிரத்து 26 பேர் தேர்வு எழுதினார்கள்.

இவர்களில் மாணவர்கள் 17 ஆயிரத்து 614 பேரும், மாணவியர்கள் 21 ஆயிரத்து 110 பேர் என மொத்தம் 38 ஆயிரத்து 724 பேர் தேர்ச்சி பெற்றனர். திருவள்ளூர் மாவட்ட அளவில் இந்த ஆண்டு 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 92.24 சதவீத மாணவர்களும், 96.26 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 3.54 சதவீதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.85 சதவீதம் ஆகும். மாவட்ட அளவில் 3 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 149 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் 27 மாணவர்கள் தேர்வு எழுதி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் இந்த ஆண்டு 22-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story