கூடலூர் பகுதியில், முல்லைப்பெரியாறு வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


கூடலூர் பகுதியில், முல்லைப்பெரியாறு வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 May 2019 9:45 PM GMT (Updated: 8 May 2019 7:57 PM GMT)

கூடலூர் பகுதியில் முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்கால்களை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் முல்லைப்பெரியாறு மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லைப்பெரியாறில் இருந்து வரும் தண்ணீர் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, உப்புக்கோட்டை, வீரபாண்டி, அரண்மனைபுதூர் வழியாக வைகை அணைக்கு சென்று அடைகிறது. லோயர்கேம்ப் முதல் ஆங்கூர்பாளையம் சட்ரஸ் வரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முல்லைப்பெரியாறின் கரை பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் செடி, கொடிகள், முட்புதர்கள் அதிகம் வளர்ந்து உள்ளது. இதனால் தண்ணீர் வரும் பாதை சுருங்கி கொண்டே வருகிறது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு மூலம் வரும் தண்ணீர் விவசாயப் பணிகளுக்கு போது மானதாக இல்லை. மேலும் வயல்வெளிகளுக்்கு வரும் பொட்டி வாய்க்கால், சாமி வாய்க்கால், வைரவன் வாய்க்கால், தாமரைக்குளம் வாய்க்கால், பாரவந்தான் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க் கால்களில் செடி, கொடிகள், முட்புதர்கள் அதிகம் வளர்ந்து தண்ணீர் வரும் பாதைகளை அடைத்து உள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். ஆனால் இதுவரை பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்கால்களில் உள்ள செடி, கொடிகள், முட்புதர் களை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story