வடமதுரை அருகே, பாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது


வடமதுரை அருகே, பாட்டியை அடித்து கொன்ற பேரன் கைது
x
தினத்தந்தி 9 May 2019 10:30 PM GMT (Updated: 9 May 2019 5:52 PM GMT)

வடமதுரை அருகே பாட்டியை விறகு கட்டையால் அடித்து கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை,

வடமதுரையை அடுத்த சுக்காம்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 80). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது மகன் சந்திரசேகரனுடன் வசித்து வந்தார். சந்திரசேகரனின் மகன் சுதாகரன் (23).

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சரஸ்வதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சுதாகரனை வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வருவதை சரஸ்வதி கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சுதாகரன் வீட்டில் கிடந்த விறகு கட்டையால் சரஸ்வதியை அடித்துள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் சரஸ்வதியின் மகள் அன்னலட்சுமி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரனை கைது செய்தனர். பாட்டியை பேரனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story