முகவரி கேட்பதுபோல் நடித்து கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு கொள்ளையர்களுடன் போராடியதால் 2 பவுன் தப்பியது


முகவரி கேட்பதுபோல் நடித்து கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு கொள்ளையர்களுடன் போராடியதால் 2 பவுன் தப்பியது
x
தினத்தந்தி 10 May 2019 10:15 PM GMT (Updated: 10 May 2019 4:59 PM GMT)

முகவரி கேட்பதுபோல் நடித்து கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்மநபர்கள் பறித்தனர். கொள்ளையர்களுடன் அவர் போராடியதால் 2 பவுன் நகை அவரது கையில் சிக்கியது. 1 பவுன் நகையுடன் மர்மநபர்கள் தப்பிச்சென்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த உள்ளகரம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி மஞ்சுளா(வயது 48). இவர், அங்குள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், முகவரி கேட்பது போல் நடித்து மஞ்சுளா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

உடனே சுதாரித்துக்கொண்ட மஞ்சுளா, கைகளால் கழுத்தில் கிடந்த சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். இதில் சங்கிலி 2 துண்டானது.

அதில் 2 பவுன் தங்க சங்கிலி மஞ்சுளா கையில் சிக்கியது. மீதம் உள்ள 1 பவுன் சங்கிலியுடன் கொள்ளையர்கள் இருவரும் தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

செங்குன்றத்தை அடுத்த பாரிவள்ளல் நகரை சேர்ந்தவர் குமரவேல் என்ற கங்காதரன்(42). இவர் செங்குன்றம் பஜாரில் பூ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கோயம்பேட்டில் இருந்து பூ வாங்கிக்கொண்டு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

புழல் ஏரிக்கரை அருகே வந்தபோது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கங்காதரன் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை பறித்து சென்றனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story