திருவெண்ணெய்நல்லூர், வானூரில், தனித்தனி விபத்து - 2 பேர் பலி


திருவெண்ணெய்நல்லூர், வானூரில், தனித்தனி விபத்து - 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 May 2019 10:30 PM GMT (Updated: 10 May 2019 5:44 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர், வானூரில் நடந்த தனித்தனி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

விழுப்புரம், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அம்மாசி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 80). இவர் நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தில் சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த காத்தவராயனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காத்தவராயன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருவெண்ணெய் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மற்றொரு விபத்தில் ஒருவர் இறந்தார். அது பற்றிய விவரம் வருமாறு:-

புதுச்சேரி மாநிலம் பாகூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (60). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த ரெங்கநாதபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து அருகில் உள்ள எல்.ஆர்.பாளையத்திற்கு சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் ரெங்கநாத புரத்திற்கு புறப்பட்டார்.

அப்போது ரெங்கநாதபுரம் சர்க்கரை ஆலை சாலையில் செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story