அதிகாரி வீட்டில் நகை-பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது 35 பவுன் நகை மீட்பு


அதிகாரி வீட்டில் நகை-பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது 35 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 12 May 2019 10:30 PM GMT (Updated: 12 May 2019 5:05 PM GMT)

திருவள்ளூரில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் நகை-பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

திருவள்ளூர் கே.ஜி. பி நகரை சேர்ந்தவர் வர்மா (வயது 61). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி. கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 62 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து வர்மா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் நகை பணத்தை திருடியது திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (25) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன்(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திருச்சியில் பதுங்கி இருந்த இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.

Next Story