வடக்கன்குளம் அருகே விளையாடியபோது பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பலி


வடக்கன்குளம் அருகே விளையாடியபோது பரிதாபம் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 12 May 2019 10:00 PM GMT (Updated: 12 May 2019 6:48 PM GMT)

வடக்கன்குளம் அருகே விளையாடியபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.

வடக்கன்குளம், 

வடக்கன்குளம் அருகே விளையாடியபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.

பண்ணை தோட்டம்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை அடுத்த பழவூர் மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி பார்வதி என்பவர் இந்த தோட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.

இவரை பார்ப்பதற்காக உறவினரான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள நுள்ளிவிளையை சேர்ந்த முருகன் மனைவி அமுதா என்பவர் தனது குழந்தைகள் அய்யப்பன் (வயது 11), அபிஷேக் (8) ஆகியோருடன் நேற்று முன்தினம் அங்கு வந்தார்.

டிராக்டரில் ஏறி விளையாடினர்

இரவில் பண்ணை தோட்டத்தில் டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த டிராக்டரின் சாவியை டிரைவர் எடுத்துச் செல்லாமல் அதில் அப்படியே வைத்து சென்று விட்டார்.

இந்த நிலையில் அய்யப்பன், அபிஷேக் ஆகியோர் டிராக்டரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது டிராக்டரில் இருந்த சாவியை விளையாட்டாக திருகியதில் டிராக்டர் ஸ்டார்ட் ஆனது. இதனால் டிராக்டர் அங்கிருந்து லேசாக நகர்ந்து ஓட ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் சட்டென்று டிராக்டரில் இருந்து கீழே குதித்து விட்டான்.

சிறுவன் பலி

டிராக்டர் மேட்டுப்பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கி சென்றது. இதனால் அபிஷேக் அதில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளான். ஆனால் தவறி கீழே விழுந்ததில், டிராக்டரின் சக்கரம் அவன் மீது ஏறி இறங்கியது. இதில் அவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதை பார்த்த அய்யப்பன் ஓடிச் சென்று தனது தாயாரிடம் நடந்த விவரத்தை கூறினான். இதையடுத்து அமுதா மற்றும் பார்வதி ஆகிய இருவரும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அங்கு அபிஷேக் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பழவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாகுல் அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

டிரைவர் மீது வழக்கு

பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்த வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் ஏறி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story