அறுவடை பணிகள் தீவிரம்: கொள்முதல் நிலையம் அமைக்காததால் குறைந்த விலைக்கு நெல் வாங்கும் வியாபாரிகள் விவசாயிகள் கடும் பாதிப்பு


அறுவடை பணிகள் தீவிரம்: கொள்முதல் நிலையம் அமைக்காததால் குறைந்த விலைக்கு நெல் வாங்கும் வியாபாரிகள் விவசாயிகள் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 12 May 2019 11:00 PM GMT (Updated: 12 May 2019 9:03 PM GMT)

அறுவடை பணிகள் தீவிரமடையும் நிலையில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் குறைந்து விலைக்கு வியாபாரிகள் நெல் வாங்குவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அந்த பாசன பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் நெல் அறுவடைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

பொதுவாக தடப்பள்ளி– அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டதும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டுக்கான நெல் அறுவடை பணிகள் தொடங்கியும் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. எனவே விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டியுள்ளது.

அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படாததால் நெல்லின் விலையை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இணைச்செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி கூறியதாவது:–

தடப்பள்ளி–அரக்கன்கோட்டை வாய்க்கால்கள், காலிங்கராயன் வாய்க்கால் ஆகியன பாசன பகுதியில் நெல் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்கின்றனர். தற்போது 30 சதவீதம் அறுவடை முடிவடைந்து விட்டது.

இட்லி குண்டு, ஏ.டி.பி.–39, ஏ.டி.பி.–45, ஏ.டி.பி.–38, ஏ.எஸ்.டி.–16, பவானி ஆகிய நெல் ரகங்களை வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். தற்போது நெல் ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் 50 காசு முதல் 2 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதாவது 65 கிலோ எடையுள்ள 4 மூட்டைகள் கொண்ட ஒரு பொதிக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை விலை குறைந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு தரப்பில் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அதற்கான உத்தரவு வரவில்லை என்று தெரிவிக்கிறார்கள். எனவே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story