சொத்துதகராறில் விபரீதம் மாடியில் இருந்து கீழே தள்ளி மகனை கொன்ற தாய் கைது


சொத்துதகராறில் விபரீதம் மாடியில் இருந்து கீழே தள்ளி மகனை கொன்ற தாய் கைது
x
தினத்தந்தி 13 May 2019 10:00 PM GMT (Updated: 13 May 2019 5:15 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே சொத்து தகராறில் மகனை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக அவரது தாயையும், தம்பியையும் போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த அம்மையார்குப்பம் சேஷப்பமுதலி தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 70). இவரது மனைவி தில்லைநாயகி (65). இவர்களுக்கு ராமு (40), மணிகண்டன்(36) என 2 மகன்கள் உள்ளனர்.

இதில் ராமுவுக்கு சுமதி (33) என்ற மனைவியும், வைரகண்ணி (15) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராமுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் ராமு மது அருந்திவிட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்த தனது தம்பி மணிகண்டன், தாய் தில்லைநாயகி ஆகியோருடன் சொத்து பிரிப்பது தொடர்பாக தகராறு செய்ததாக தெரிகிறது.

அப்போது வாய்த்தகராறு முற்றி தாய் தில்லைநாயகி, தம்பி மணிகண்டன் ஆகியோர் கைகலப்பில் ஈடுபட்டு ராமுவை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த ராமு படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராமுவின் மனைவி சுமதி, ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சோளிங் கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ராமுவை கொலை செய்த அவரது தாய் தில்லைநாயகி, தம்பி மணிகண்டன் ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story