தஞ்சையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரியில் இயங்கும் 30 வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளது


தஞ்சையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரியில் இயங்கும் 30 வாகனங்கள் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளது
x
தினத்தந்தி 13 May 2019 11:00 PM GMT (Updated: 13 May 2019 5:21 PM GMT)

தஞ்சையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரியில் இயங்கும் 30 வாகனங்கள் மாநகராட்சி சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக தஞ்சை சீனிவாசபுரம் அருகே ஜெபமாலைபுரத்தில் 21 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த கிடங்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

தினமும் 120 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதால் குப்பைகளை மேலும் கொட்டுவதற்கு கூட இடம் இல்லாத அளவுக்கு முழுமையாக குப்பைகள் நிரம்பியுள்ளன. இதனால் குப்பைகளை எல்லாம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகரில் உள்ள வீடுகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் சேரும் குப்பைகளை பொதுமக்களே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து ஒரே இடத்திற்கு குப்பைகள் கொண்டு வரப்படாமல் தவிர்க்க 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மையங்களுக்கு குப்பைகளை சேகரித்து வருவதற்கு ஏற்ப பேட்டரியில் இயங்கக்கூடிய வாகனங்களை புதிதாக வாங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி முதல்கட்டமாக 30 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசலில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த புதிய வாகனங்கள் முழுவதும் டீசல் பயன்பாட்டை தவிர்த்து புகை மாசு இல்லாமல் இருக்கும் வகையில் மின்சார சார்ஜ் மூலம் இயங்கக்கூடியவை.


ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மின்சாரம் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 8 மணிநேரம் இயங்கக்கூடிய வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக பெட்ரோல், டீசல் பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் எந்த அளவுக்கு வேகமாக செல்லுமோ அந்த அளவுக்கு இந்த வாகனங்களை வேகமாக இயக்க முடியும். இந்த வாகனத்தில் சுமார் 750 கிலோ எடையுள்ள குப்பைகளை எடுத்து செல்லலாம்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை மாநகராட்சி குப்பைக்கிடங்கில் குப்பைகள் நிரம்பியுள்ளது. இதனால் அந்த குப்பைகளை மறுசுழற்சி முறையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எல்லா குப்பைகளையும் அகற்றிய பிறகு அந்த இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது.

குப்பைக்கிடங்கிற்கு பதிலாக தஞ்சை மாநகராட்சியில் 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. அந்த பகுதி குப்பைகள் அங்கேயே தரம்பிரிக்கப்படும். இதற்காக ஸ்மார்ட்சிட்டி திட்ட நிதியில் இருந்து பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 30 வாகனங்கள் தற்போது வந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் 64 வாகனங்கள் வரவழைக்கப்பட உள்ளது என்றனர்.

Next Story