கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை


கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2019 10:00 PM GMT (Updated: 14 May 2019 9:06 PM GMT)

போரூர் அருகே கணவர் விபத்தில் இறந்த துக்கம் தாங்காமல் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

போரூர் அடுத்த காரம்பாக்கம் பொன்னி நகர், குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 27). இவரது மனைவி இளந்தென்றல் (25). 8 மாத கர்ப்பிணி. கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் பிரவீன்குமார் இறந்து போனார். இதனால் இளந்தென்றல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அவரது அறைக்குள் சென்ற பிறகு, நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மாமனார் ரவி அறைக்கதவை தட்டியுள்ளார்.

தூக்குப்போட்டார்

கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இளந்தென்றல் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அவரை கீழே இறக்கி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் பரிசோதித்த போது இளந்தென்றல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று இளந்தென்றல் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கர்ப்பிணி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story