நாமக்கல்லில் பரபரப்பு: ஓட்டல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி


நாமக்கல்லில் பரபரப்பு: ஓட்டல் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 9:48 PM GMT)

நாமக்கல்லில் ஓட்டல் தொழிலாளியை சக தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வீரமாச்சான்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்து வருகிறார். அதே ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக நாமக்கல்லை சேர்ந்த ஞானசேகரன் பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு ஞானசேகரன் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் வெங்காயம் வெட்டி தருமாறு கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டு உள்ளார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி வாழை இலையை வெட்டி விட்டு வெங்காயம் வெட்டி தருவதாக கூறியதாக தெரிகிறது. இதில் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகரன் அருகில் இருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை சக தொழிலாளர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டல் தொழிலாளியை சக தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story