காரங்காடு சுற்றுலா மையத்துக்கு வந்த ஒருநபர் சவாரி படகுகள்; சுற்றுலா பயணிகள் ஆர்வம்


காரங்காடு சுற்றுலா மையத்துக்கு வந்த ஒருநபர் சவாரி படகுகள்; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 14 May 2019 9:53 PM GMT)

தொண்டி அருகே காரங்காடு சூழல் சுற்றுலா மையத்துக்கு வந்துள்ள ஒரு நபர் சவாரி செய்யும் நவீன படகுகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் கடல்நீரும், மழைநீரும் கலக்கும் சதுப்பு நிலத்தில் மாவட்ட வனத்துறை மற்றும் வன உயிரின காப்பகம் மூலம் உருவாக்கப்பட்ட அலையாத்தி செடிகள் காடுகளாக உருவாகி இயற்கை அழகு மிகுந்து காணப்படுகிறது. இந்த காடுகள் காரங்காடு கடற்கரை பகுதி முழுவதும் அரண்மனை மதில் சுவர்களை போல் ஓங்கி வளர்ந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இப்பகுதியில் உள்ள கோட்டக்கரை ஆற்றில் வரும் உபரிநீர் கலக்கும் கலிமுகப்பகுதியான சேந்தனேந்தல் ஓடை தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த அலையாத்தி காடுகள் இயற்கை எழில் நிறைந்து காணப்படுகிறது. இவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. இயற்கை தந்த அருட்கொடையாக விளங்கும் காரங்காடு அலையாத்தி காடுகள் பறவைகள் இனவிருத்தி செய்யவும், இரைதேடவும் உகந்த சூழல் நிறைந்து காணப்படுகிறது.

இதனையொட்டி காரங்காடு கடற்கரைக்கு ஆண்டுதோறும் வந்து செல்லும் பறவையினங்களையும், இயற்கை வளங்களையும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க காரங்காடு கிராமத்தில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் உருவாக்கப்பட்டது. இதற்காக வனத்துறை மூலம் கடந்த 2017-ம் ஆண்டு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மேம்பாட்டுக் குழு துவங்கப்பட்டு அதன் மூலம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி துவங்கப்பட்டது.

இதனால் இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இங்கு சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை சுற்றிப்பார்க்க 3 படகுகள் மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது. தற்போது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ‘கயாக்ளிங்’ என அழைக்கப்படும் ஒருநபர் படகு சவாரி தொடங்கப்பட உள்ளது.

இதற்காக வனத்துறை மூலம் குஜராத் மாநிலம் வதோராவில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் 6 நவீன பைபர் படகுகள் காரங்காடு சூழல் சுற்றுலா மையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு ஒரு நபர் படகு சவாரிக்கு 5 படகுகளும், இரு நபர் படகு சவாரிக்கு ஒரு படகும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு விரைவில் ஒருநபர் படகு சவாரி தொடங்கப்பட உள்ளது.

தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருநபர் படகு சவாரி செய்யும் படகுகளை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருவதுடன் விரைவில் ஒருநபர் படகு சவாரியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story