தலையில் கல்லைப்போட்டு மகளை கொன்ற தாய் கைது கணவருடன் சேர்த்து வைக்கும்படி சண்டையிட்டதால் ஆத்திரம்


தலையில் கல்லைப்போட்டு மகளை கொன்ற தாய் கைது கணவருடன் சேர்த்து வைக்கும்படி சண்டையிட்டதால் ஆத்திரம்
x
தினத்தந்தி 14 May 2019 10:16 PM GMT (Updated: 14 May 2019 10:16 PM GMT)

கணவருடன் சேர்த்து வைக்க கூறி தொல்லை கொடுத்து வந்த மகளை தலையில் கல்லைப்போட்டு கொன்ற அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனே மாவட்டம் பாராமதியில் உள்ள பிரகதிநகரை சேர்ந்தவர் சஞ்ஜீவானி போபத் (வயது 34). இவருடைய மகள் ருதுஜா (19). கடந்த ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, ருதுஜா வேறு சாதி வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர், மனைவி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில், ஒரு சில மாதங்களிலேயே காதல் தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ருதுஜா பெற்றோரின் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதனால் வேதனை அடைந்த பெற்றோர் மகளை கணவர் வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பெண்ணின் கணவர் மனைவியை திரும்ப அழைத்து செல்ல முன்வரவில்லை.

கணவர் மீது புகார்

இதனால் மனமுடைந்த பெண் கணவர் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்தனர்.

இந்தநிலையில், திடீரென கணவர் மீது ருதுஜாவுக்கு பாசம் வந்தது. இதனால் அவர் கணவரிடம் தன்னை சேர்த்து வைக்கும்படி பெற்றோரிடம் வற்புறுத்தி னார். தனது மகளின் ஆசைக்கு செவிகொடுத்த அவர்கள், மருமகனிடம் இதுகுறித்து மீண்டும் பேசினர். மேலும் கற்பழிப்பு வழக்கை திரும்ப பெறுவதாகவும் உறுதியளித்தனர்.

ஆனால் அவர் இதனை ஏற்க மறுத்துவிட்டார். எனினும் கடந்த சில நாட்களாக ருதுஜா தன்னை கணவரிடம் சேர்த்து வைக்கும்படி தொடர்ந்து தாய்க்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இதனால் தாய், மகள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மேலும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க உங்களுக்கு விருப்பமில்லை என ருதுஜா பெற்றோரை குறை கூறினார்.

தாய் கைது

இந்தநிலையில், நேற்று காலை தாய், மகள் இருவருக்கும் இடையே இதுதொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது சண்டையாக மாறியது.

இதில் கோபம் அடைந்த சஞ்ஜீவானி போபத் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பெரிய கல்லை எடுத்து மகளின் தலையில் தூக்கி போட்டார். இதில் தலை நசுங்கிய ருதுஜா சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாய் சஞ்ஜீவானி போபத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story