வள்ளியூர் அருகே, திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை


வள்ளியூர் அருகே, திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 12:12 AM GMT)

வள்ளியூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆ.திருமலாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் அன்னவேல் (வயது 46). இவர் கேரளாவில் புத்தன்குறிச்சி என்ற இடத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இவரது 2-வது மகள் யுகந்தா (20). இவர் வள்ளியூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், திசையன்விளை அருகே உள்ள மருதநாச்சியை சேர்ந்த தில்லைக்குட்டி என்ற திலகராஜ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யுகந்தா கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்தவர்கள் யுகந்தா தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். யுகந்தாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யுகந்தா தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story