விருத்தாசலம் அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


விருத்தாசலம் அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 12:13 AM GMT)

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே ஆலடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் போதிய அளவு குடிநீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு, கிராம மக்களுக்கு வினியோகம் செய்ய முடியவில்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குறைந்தளவு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. எனவே கிராம மக்கள், அருகில் உள்ள கொட்டாரங்குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வருவதை காணமுடிகிறது.

குடிநீர் தட்டுப்பாடு குறித்து விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆலடி கிராம பெண்கள் நேற்று காலையில் காலிகுடங்களுடன் அங்குள்ள விருத்தாசலம்-பாலக்கொல்லை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் கூறுகையில், கோடைக்காலம் வந்தோலே எங்களது கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்ற பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story