ஈரோட்டில் பலத்த காற்று: டீக்கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி


ஈரோட்டில் பலத்த காற்று: டீக்கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலி
x
தினத்தந்தி 15 May 2019 11:15 PM GMT (Updated: 15 May 2019 9:08 PM GMT)

ஈரோட்டில் வீசிய சூறாவளிக்காற்றால் டீக்கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலியானார்.

ஈரோடு ,

 ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் கருங்கல்பாளையம் பழைய போலீஸ் நிலையம் அருகில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஈரோட்டில் பலத்த காற்று வீசியது. அப்போது டீக்கடையின் மேற்கூரை இடிந்து அங்கிருந்த ஒருவரின் மேல் விழுந்தது.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் அந்த பகுதியில் பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும், அவருக்கு 50 வயது இருக்கும் என்பதும் தெரிய வந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story