மேல்மலையனூர் அருகே, மாற்றுத்திறனாளி வாலிபர் படுகொலை - கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார்


மேல்மலையனூர் அருகே, மாற்றுத்திறனாளி வாலிபர் படுகொலை - கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 9:13 PM GMT)

மேல்மலையனூர் அருகே மாற்றுத்திறனாளி வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அருகே உள்ள கிழவம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள் இதுபற்றி அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் அவலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மேல்மலையனூர் அடுத்த நந்திபுரம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் கமல் என்ற கமலக்கண்ணன்(வயது 27) மாற்றுத்திறனாளி என்பது தெரிந்தது. மேலும் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்த கமல் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினரிடம் நண்பர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்றவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையே கமல் கொலை செய்யப்பட்டதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கமலின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

கமலின் உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கமல் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story