விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் பஸ்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் பஸ்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 10:17 PM GMT)

விருதுநகர் ராமமூர்த்தி ரோடு ரெயில்வே மேம்பாலத்தில் பஸ்களை இயக்குவது குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அந்த கனவு நனவாகும் வகையில் 2016-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. 2 ஆண்டுகளில் பணிகள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூடுதலாக ஓராண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்டு பணிகள் முடிந்து விட்டன. எனினும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பால் பாலம் திறக்கப்படுவது குறித்து முறையான அறிவிப்பை வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் முறையாக ஆய்வு செய்யப்பட்டு வாகன போக்குவரத்துக்கு சான்று அளிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. எவ்வித அனுமதியும் வழங்கப்படாமல் வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே செல்ல தொடங்கின.

இதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் எவ்வித தடையும் விதிக்கவில்லை. ஆனால் மேம்பாலத்தின் பக்கவாட்டில் சேவை ரோடு அமைக்கப்படாததுடன், பாலத்தின் இரு புறமும் படிக்கட்டுகளும் கட்டப்படவில்லை. மேலும் மேம்பாலத்தில் மின் விளக்கு வசதிகளும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் விருதுநகரில் இருந்து காரியாபட்டி மற்றும் நகரின் கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இன்னும் மேம்பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை. பாலம் கட்டுமானப்பணி நடந்தபோது இருந்ததைப்போல இன்னமும் மாற்றுப்பாதையிலேயே சென்று வருகின்றன. இதனால் பொது மக்களுக்கு ஏற்பட்டு வரும் வசதிக்குறைவு தொடருகிறது.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த மேம்பாலத்தில் பஸ் போக்குவரத்தை அனுமதிக்க விதிமுறைப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாமதம் இல்லாமல் மேற்கொண்டு பஸ் போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

வழக்கம்போல மவுனம் சாதிக்காமல் இந்த பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story