நாமக்கல் தினசரி சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.120-க்கு விற்பனை வரத்து அதிகரிப்பு எதிரொலி


நாமக்கல் தினசரி சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.120-க்கு விற்பனை வரத்து அதிகரிப்பு எதிரொலி
x
தினத்தந்தி 16 May 2019 9:30 PM GMT (Updated: 16 May 2019 4:27 PM GMT)

நாமக்கல் தினசரி சந்தையில் நேற்று வரத்து அதிகமாக இருந்ததால் மல்லிகை பூ கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன. இந்த பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி பூ சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் கோடை மழை காரணமாக கடந்த சில நாட்களாக இந்த சந்தைக்கு பூக்கள் வரத்து இருமடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் பூக்களின் விலை சரிவடைந்து உள்ளது.

அதன்படி கடந்த மாதம் கிலோ ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.120-க்கும், ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ நேற்று கிலோ ரூ.80-க்கும் விற்பனையாகின.

இதேபோல் கடந்த மாதம் கிலோ ரூ.250-க்கு விற்பனையான முல்லை பூ நேற்று கிலோ ரூ.130-க்கும், கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ நேற்று கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Next Story