வள்ளியூரில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை பணியை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை


வள்ளியூரில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை பணியை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 7:09 PM GMT)

வள்ளியூரில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வள்ளியூர்,

வள்ளியூர் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வே கேட் அமைந்து உள்ளது. வள்ளியூர்-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த ரெயில்வே கேட்டை கடந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அந்த வழியாக ரெயில்கள் செல்லும்போது, சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதையடுத்து அங்கு ரெயில்வே கேட்டை அகற்றி விட்டு, ரூ.4 கோடியே 80 லட்சம் செலவில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இதற்காக ரெயில்வே தண்டவாளத்தின் வடக்கு பகுதியில் தற்காலிகமாக வாகனங்கள் கடந்து செல்லும் வகையில், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணிக்காக சுமார் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. தற்போது பெய்த மழையில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் சர்வீஸ் ரோடு வழியாக செல்லும் வாகனங்கள், ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு விபத்தை தவிர்க்கும் வகையில், இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். சர்வீஸ் ரோட்டை அகலமாக அமைக்க வேண்டும். ரெயில்வே சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story