விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஆனைமலை- நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் - சூலூர் தொகுதி பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஆனைமலை- நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் - சூலூர் தொகுதி பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 7:27 PM GMT)

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆனைமலை- நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சூலூர் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

சுல்தான்பேட்டை,

சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செஞ்சேரிபுதூர், சுல்தான்பேட்டை, இடையார்பாளையம், பள்ளப்பாளையம் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்று பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதேபோல 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. நல்லாட்சி தொடரும்.

சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை வெற்றிபெறச் செய்து சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால், சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தீயணைப்பு நிலையம் அமைத்து தரப்படும். ஆனைமலை- நல்லாறு திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். நொய்யல்- உப்பாறு திட்டம் செயல்படுத்தப்படும். செஞ்சேரிமலையில் சாலை வசதிகள், ஜல்லிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் வந்த நல்ல தலைவர்கள். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமைத்த வெற்றி கூட்டணி மீண்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி மகத்தான வெற்றி கூட்டணி.

அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு கட்சிகளுக்கும் நான்கு எழுத்துகள். மேலும் அ.தி.மு.க., தே.மு.தி.க.வில் மட்டுமே பெண்களுக்கு என்று கட்சி சேலைகள் உள்ளன. கடவுள் பக்தி நிறைந்த இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, 3-வது அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டது. அந்த கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு மட்டுமே இருந்தது. இதனை மாற்றி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா.நெசவு தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டால் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வந்தனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த இடத்திலும் மின்வெட்டு இல்லை. எப்படி தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியதோ, அதேபோல தமிழகத்தில் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் தேவையான தண்ணீரை கொண்டு வருவோம்.

அ.தி.மு.க.வில் இருந்த ஒரே ஸ்லீப்பர் செல் டி.டி.வி.தினகரன் தான். அவர் தனியாக வெளியே வந்து கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவர் தான் ஸ்லீப்பர் செல் என்பது திட்ட வட்டமாக தெரிகிறது. டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடையாது. தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்திட அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. பனப்பட்டி தினகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story