கொள்ளையர்களுடன் போராடியபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து பெண் படுகாயம்


கொள்ளையர்களுடன் போராடியபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து பெண் படுகாயம்
x
தினத்தந்தி 16 May 2019 11:15 PM GMT (Updated: 16 May 2019 7:29 PM GMT)

கொள்ளையர்களுடன் போராடிய பெண் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்தார்.

மும்பை,

புனே, லோனவாலா பகுதியை சேர்ந்தவர் சீமா (வயது32). இவர் சம்பவத்தன்று புனே-குவாலியர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குவாலியர் நோக்கி மகள்களுடன் சென்று கொண்டு இருந்தார். ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு வசாய் அருகே சென்று கொண்டு இருந்தது.

அப்போது அங்கு வந்த 2 கொள்ளையர்கள் சீமாவின் மகள் வைத்திருந்த பையை எடுத்து சென்றனர். இதை கவனித்த சீமா கொள்ளையர்களை பிடிக்க முயன்றார். இதில், அவர்கள் சீமாவின் கைப்பையையும் பறித்து கொண்டு ஓடினர்.

இதையடுத்து சீமா அந்த பையை மீட்பதற்காக கொள்ளையர்களிடம் போராடினார். அப்போது சீமா ஓடும் ரெயிலில் இருந்து தவறி கிழே விழுந்தார்.

இந்தநிலையில், ஓடும் ரெயிலில் இருந்து தாய் விழுந்ததை பார்த்து அவரது மகள்கள் கதறி அழுதனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

இதையடுத்து கொள்ளையர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பயணிகள், ரெயில் கார்டு உதவியுடன் படுகாயங்களுடன் கிடந்த சீமாவை மீட்டு பொய்சர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story