கணவர்- குழந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தீக்குளித்து பெண் தற்கொலை


கணவர்- குழந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தீக்குளித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 17 May 2019 10:15 PM GMT (Updated: 17 May 2019 9:00 PM GMT)

கணவர், குழந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் கொங்கு நகரை சேர்ந்தவர் கங்கா சங்கர் (வயது 29). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி சசி (21). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது.

நேற்று கணவன், மனைவி, குழந்தை 3 பேரும் வீட்டில் இருந்தனர். திடீரென்று சசி, தனது கணவரையும், குழந்தையையும் வீட்டுக்குள் வைத்து கதவை பூட்டி விட்டு வெளியே வந்தார். தன்னையும், குழந்தையையும் வீட்டுக்குள் வைத்து மனைவி பூட்டியதால் ஏதோ விபரீதம் நிகழ போகிறது என கங்காசங்கர் பயந்தார். அதனால் அவர் கதவை திறக்கும்படி சத்தம் போட்டார்.

இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த சசி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவர் அலறினார். மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு கதவை உடைத்து கொண்டு கங்கா சங்கர் வெளியே வந்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.

அதற்குள் தீயில் கருகிய சசி சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார். கதவை உடைத்து கொண்டு வெளியே வந்ததும் மனைவியை அவரால் காப்பாற்ற முடியவில்லை. எனது மனைவியை பறி கொடுத்து விட்டேனே என கங்கா சங்கர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கதவை உடைத்ததில் கங்காசங்கருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. சசியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இது குறித்து தாராபுரம் ஆர்.டி.ஓ. பவன்குமார், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story