விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து


விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து
x
தினத்தந்தி 17 May 2019 10:30 PM GMT (Updated: 17 May 2019 9:46 PM GMT)

எஸ்.புதூர் ஒன்றியம் கே.உத்தம்பட்டியில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் உயர்மின் அழுத்த கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஒன்றியம் கே.உத்தம்பட்டியில் விவசாயம் பிராதான தொழிலாக உள்ளது. இதனால் அதிகாலையில் தங்களது விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் இரவு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தநிலையில் விவசாய நிலங்களில் வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன.

இந்த மின்கம்பிகள் வெகுதூரம் கொண்டு செல்லப்படுவதால், விளை நிலங்களின் மத்தியில் செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. மேலும் இந்த மின்கம்பிகள் அமைக்கப்பட்ட போது, நன்றாக இழுத்து கட்டப்பட்டு இருந்தன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தாழ்வாக செல்கிறது.

கடந்த 6 மாதங்களாக விவசாயம் செய்துள்ள நிலங்கள் வழியாக செல்லும் இந்த உயர்மின் அழுத்த கம்பிகள் மிகத்தாழ்வாக செல்வதால் இதன் வழியாக செல்லும் விவசாயிகள் ஒரு வித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் விவசாயிகள் இரவில் வீடு திரும்பும் போது தங்களது தலையில் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் வைக்கோல்களை சுமந்து கொண்டு வரும் போது எளிதில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த குறையை சரிசெய்ய வேண்டுமென அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story