விருதுநகர் அருகே சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம்; போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு


விருதுநகர் அருகே சாலை சீரமைப்பு பணியில் மெத்தனம்; போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 10:06 PM GMT)

விருதுநகர் அருகே சாலை சீரமைப்பு பணியை 3 மாதங்களில் முடித்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்த அதிகாரிகள் ஓராண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில் கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்த தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்திடம் மத்தியசேனையில் இருந்து கவுண்டம்பட்டி வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே உள்ள சிவகாசி சாலையை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்தனர். மேலும் ஆமத்தூரில் இருந்து மீசலூர் செல்லும் சாலையையும் சீரமைக்க கோரி இருந்தனர்.

மாவட்ட நிர்வாகம், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ள விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட என்ஜினீயர், விருதுநகர்-சிவகாசி ரோட்டினை ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் சேர்த்து 4 மாத காலத்திற்குள் பணியினை முடிப்பதாகவும், மத்தியசேனை முதல் கவுண்டம்பட்டி வரை உள்ள சாலையினை 2018-19-ம் நிதியாண்டிற்கான சாலை மேம்பாட்டு திட்டத்தில் எடுத்து மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், பணிகளை தொடங்கி 3 மாத காலத்திற்குள் சாலை சீரமைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும் ஆமத்தூர்-மீசலூர் சாலை விருதுநகர் யூனியன் சாலை என்றும், சம்பந்தப்பட்ட துறையினை அணுகி நிவாரணம் தேடி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 மாதங்களுக்குள் சாலை சீரமைப்புகள் பணிகள் முடிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஓராண்டு ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாகவே உள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் இந்த பிரச்சினை குறித்து மனுக்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் கவுண்டம்பட்டி சாலையினை ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 27.9.2018 அன்று டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும், விரைவில் பணி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் வெல்லூர், கவுண்டம்பட்டி மற்றும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பல முறை அதிகாரிகளிடம் சென்று மனுக்கள் கொடுத்தும் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக முருகேசன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் மெத்தனம் காட்டும் நிலையில் மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story