கொடைக்கானல் பகுதியில், பீச்சஸ் பழ சீசன் தொடக்கம்


கொடைக்கானல் பகுதியில், பீச்சஸ் பழ சீசன் தொடக்கம்
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 10:50 PM GMT)

கொடைக்கானலில் பீச்சஸ் பழ சீசன் தொடங்கி உள்ளது.

கொடைக்கானல்,

தமிழில் குழிப்பேரி என்று அழைக்கப்படும் பீச்சஸ் பழங்களின் தாயகம் சீனாவாகும். இந்த பழம் ஆப்பிள் போன்று தோற்றமளிக்கும். இந்த பழமானது ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் காய்க்கும் பருவமாகும். கொடைக்கானல் பகுதியில் உள்ள செண்பகனூர், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் இந்த பழ மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது பீச்சஸ் பழ சீசன் தொடங்கி உள்ளன. கடந்த வருடம் சரியான மழைப்பொழிவு இருந்ததால் தற்போது நல்ல விளைச்சல் அடைந்துள்ளன. மேலும் இந்த பழங்கள் பழ ரசங்களில் கலப்பதற்கும், கேக் தயாரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. உயிர் சத்துக்கள், பொட்டாசியம் ப்ளோரைடு முதலிய தாது சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், பார்வை திறனை அதிகரிக்க செய்தல், சிவப்பணுக்கள் அதிகரிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக்குதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களை கொண்டது. தற்போது அதிக விளைச்சல் அடைந்துள்ள இந்த பழங்கள் கிலோவுக்கு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. கூலி, வாடகை பார்த்தால் ஒன்றும் மிஞ்சுவதில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பீச்சஸ் பழங்களை சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story