செய்யாறு அருகே மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி


செய்யாறு அருகே மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 18 May 2019 10:00 PM GMT (Updated: 18 May 2019 3:49 PM GMT)

செய்யாறு அருகே மரத்தில் கார் மோதி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். பவுர்ணமி கிரிவலத்துக்கு வந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

செய்யாறு, 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், பதினந்தபாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராவ் (வயது 65). இவருடைய மனைவி ராஜலட்சுமி (60). இவர்களது உறவினர் சீனிவாசுலுராவ் (51). இவரது மனைவி ஜான்சி (40). இவர்கள் 4 பேரும் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு காரில் வந்தனர்.

செய்யாறை அடுத்த அருகாவூர் கிராமத்தின் அருகே வந்த போது திடீரென சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோகன்ராவ், சீனிவாசுலுராவ், ஜான்சி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஜான்சி உயிரிழந்தார்.

இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story