சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - போலீசார் விசாரணை


சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 May 2019 10:30 PM GMT (Updated: 18 May 2019 7:57 PM GMT)

சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவர்களது மகள் அஞ்சலி (8). இந்த நிலையில் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் கனகராஜ் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து தனது குடும்பத்தினரை திருப்பூருக்கு அழைத்து சென்றார்.

மேலும் தனது மனைவி விஜயலட்சுமியை அதே கம்பெனியில் வேலைக்கு சேர்த்தார். இதற்கிடையே திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணி (39) என்பவருக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் நெருங்கி பழகினர். இதை அறிந்த கனகராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமி தனது மகள் அஞ்சலி மற்றும் சுப்பிரமணியை அழைத்து கொண்டு கூடலூரில் உள்ள குறிஞ்சி நகருக்கு வந்தார். இதனிடையே நேற்று மாலை 5 மணிக்கு தனது வீட்டின் பின்புறம் உள்ள காபி தோட்டத்தில் விஜயலட்சுமி, மகள் அஞ்சலி, சுப்பிரமணி ஆகியோர் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் நியூகோப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் 3 பேரையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நியூகோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story