திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு பணிகளில் தனியார் மயத்தை கைவிட வேண்டும்


திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு பணிகளில் தனியார் மயத்தை கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 19 May 2019 10:30 PM GMT (Updated: 19 May 2019 7:46 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் துப்புரவு பணிகளில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்று சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் 3-வது மாவட்ட மாநாடு திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன், மாநில சம்மேளன தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் உள்ள துப்புரவு பணிகளில் தனியார் மயத்தை அரசு கைவிட வேண்டும். அரசாணை 2(டி) 62-ன்படி ஊதியம் நிர்ணயித்து ஊதியம் வழங்கிட மாவட்ட கலெக்டரை வலியுறுத்துவது, கிராம ஊராட்சி ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு ஊதியம் மற்றும் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் 10.5.2000-க்கு பிறகு பணி அமர்த்தப்பட்ட டேங்க் ஆபரேட்டர்களை நிரந்தரமாக்கி ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.

தூய்மை காவலர்களை ஊராட்சி ஊழியர்களாக்கி ஊதியம் வழங்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் டேங்க் ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் வீட்டு வசதி செய்துதர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான சங்க ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story