அனைத்து போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுத தயாராக வேண்டும் மாவட்ட நீதிபதி பேச்சு


அனைத்து போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுத தயாராக வேண்டும் மாவட்ட நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 7:58 PM GMT)

மாணவர்கள் அனைத்து போட்டி தேர்வுகளையும் எழுத தயாராக வேண்டும் என்று மாவட்ட நீதிபதி சுமதி கூறினார்.

தாமரைக்குளம்,

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 52-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை தலைவர் அருள் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட நீதிபதி சுமதி, 11 இளங்கலை பிரிவுகளில் 486 மாணவர்களுக்கும், 9 முதுகலை பிரிவுகளில் 175 மாணவர்களுக்கும், 2 அறிவியல் நிறைஞர் பிரிவுகளில் 11 மாணவர்களுக்கும் என மொத்தம் 672 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முயற்சி செய்ய வேண்டும்

மாணவர்கள் பட்டங்களை வாங்கி விட்டோம், வேலை கிடைத்துவிடும் என நினைக்காமல், அரசால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளையும் எழுத தயாராக வேண்டும். தொடர்ந்து அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொண்டு தேர்வெழுதும்போது, ஏதேனும் ஒன்றில் நிச்சயம் வெற்றிகிடைக்கும். படிப்புக்கேற்ற வேலையை தான் செய்வேன் என நினைக்காமல், கடும் போட்டியுள்ள இந்த கால கட்டத்தில் கிடைக்கும் வேலையை ஏற்றுச்செய்ய மாணவர்கள் தயாராக வேண்டும். அதேபோல் இதுவரை மாணவர்களாக இருந்த நீங்கள் தங்களது பெற்றோர்களிடம் அனைத்து தேவைகளுக்கும் பணம் பெற்றிருப்பீர். இனி அவர்கள் கடன்களை அடைக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் நீதிபதி மாணிக்கம், அனைத்துத்துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story