குலசேகரன்பட்டினம் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி


குலசேகரன்பட்டினம் அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 19 May 2019 10:30 PM GMT (Updated: 19 May 2019 10:26 PM GMT)

பஸ்-மோட்டார் சைக் கிள் மோதியதில் பெண் பலியானார். அவரது கணவர் காயம் அடைந்தார்.

குலசேகரன்பட்டினம், 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள குமரிக்கோட்டை தவசியாபுரத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம். அவருடைய மனைவி சுடலைவடிவு (வயது 40). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினம் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

குலசேகரன்பட்டினம் பைபாஸ் ரோடு தீதத்தாபுரம் விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூரை நோக்கி வந்த சுற்றுலா பஸ், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நமச்சிவாயம் லேசான காயம் அடைந்தார். சுடலைவடிவு படுகாயம் அடைந்தார்.

பலத்த காயம் அடைந்த சுடலைவடிவை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுடலைவடிவு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று உயிர் பலி ஏற்படுவதாகவும், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வசதியாக குலசேகரன்பட்டினம் பைபாஸ் ரோடு பகுதியில் நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story